அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

மனித தர்மம்

கடித்த எறும்பின்
கருணை மனுவை
அதை கொன்ற பின்,
பரிசீலிக்கும்
மனித தர்மத்தை
என்னவென்று சொல்ல?



'நான்' என்னும் 'கருங்குழி'

யாரோ சொல்லி,
எனக்குள் எட்டிப்பார்க்க,
அங்கிருந்த கருங்குழி
என்னை உள்ளே இழுத்துக்கொண்டது.
இப்போது
என்னால் யாரையும்
பார்க்கமுடிவதில்லை.
யார் குரலையும்
கேட்கமுடிவதில்லை.
தயவு செய்து
உங்களுக்குள் எட்டிப்பார்க்காதீர்கள்.

கவிஞனின் கவிதை

கடல் நீரில்
கால் நனைக்கும் போது,தன்
கால்கள் கரைவதை
உணரமுடியாத
கவிஞனின் கவிதை
ஆன்மாவில்லாத
வெற்றுடம்பு.

நீ நல்லவனா?





நீ நல்லவனா?

என்று

கேட்டவனிடம் சொன்னேன்,

பொய்,

பொறாமை,

கோபம்,

வஞ்சம்,

ஏமாற்றம்,

தோல்வி,

போன்ற குப்பைகளால் ஆன,

கனத்த இதயம்

எனக்கும் உண்டு என்று.

உன் மெளனத்தின் முன்னால்

உன் மெளனத்தின் முன்னால்
ஒரு குழந்தையாய் தவிக்கிறேன்!
கொல்ல நினைக்கிறாயா?
கொஞ்ச  நினைக்கிறாயா?

உன் மெளனத்தின் முன்னால்
என் இதயம் துடிப்பது கூட
எரிசலாய் இருக்கிறது.

உன் மெளனத்தின் முன்னால்
என் ஊன்னுடம்பு
மெழுகாய் உருகுகிறது.

 உன் மெளனத்தின் முன்னால்
 உனக்கும் எனக்கும் இடையேயான
கால தூர பிரபஞ்சபோர்வை நீள்கிறது.

 உன் மெளனத்தின் முன்னால்
உணர்வுகளை தொலைத்த
புத்தனாகிறேன்.

மொத்தத்தில்
உன் மெளனத்தின் முன்னால்,நான்
என்னையே தொலைத்து தேடுகிறேன்.




வாழ்வு

வாழ்வை என்னவென்று நினைத்தாய்?
வாழ்வு
நிற்காமல் ஓடும் கால ஓடை,
யாரையும் சட்டை செய்யாமல்,
யாருக்காகவும் கருணைகாட்டாமல்,
இல்லாத இலக்கை நோக்கி ஓடும் வேட்டைக்காரன்.
 நீ ஜான் ஏறினால் முழம் சறுக்கும்,அதற்காக
ஏறுவதை நிறுத்தாதே.
சுகங்களை அள்ளி வீசும்,அங்கே
தேங்கி சாக்கடை ஆகிவிடாதே.
போலிகள் சுற்றி வருவார்கள்
அவர்களிடம் ஏமாந்துவிடாதீர்கள்.
வெறுப்பை அள்ளி உமிழும்,அதற்காக
வருத்தப்பட்டு பயணத்தை நிறுத்தாதீர்கள்.
தோல்விகள் அலையாய் மலையாய் வரும்
சுருண்டு படுத்துவிடாதீர்கள்.
இழப்புகள் தகர்க்கவரும்
தகர்ந்துவிடாதீர்கள்.
ஓடவிட்டு செங்கல்லால் அடிக்கும்
திரும்பி அடிக்க மறந்துவிடாதீர்கள்.
திமிரை கொடுக்கும்,அதை
 நம்பி ஏமாந்துவிடாதீர்கள்.
அன்பை கொடுக்கும்,அதற்கு
அடிமையாகிவிடாதீர்கள்.
 நட்பை கொடுக்கும்,அதற்காக
 நடிக்க ஆரம்பித்துவிடாதீர்கள்.
வாழ்வை பற்றி தெரியாமல்
உன்னை வாழ வைக்கும்.
வாழ ஆரம்பிக்கும் போது
இடுகாட்டில் புதைத்துவிடும்.
வாழ்வை என்னவென்று நினைத்தாய்?

புத்தாண்டு வாழ்த்துகள் -2014

வருடங்கள் கடப்பதை மனம் மறந்தாலும் ,
உடல் காட்டி கொடுத்துவிடுகிறது.
இழப்புகள் வலித்தாலும்,
வாழ்க்கை திருப்பங்கள் இனிக்கின்றன.
இருள் பயமூட்டினாலும் ,
ஒளி நம்பிக்கையளிக்கிறது.
அவரவருக்கொரு கொள்கை,அதற்கொரு பயணம்,
எங்கோ சந்தித்தோம் ,எங்கோ போகிறோம்?
இளைப்பாறும் நேரம் சந்தித்துக்கொள்கிறோம்,பகிர்ந்துகொள்கிறோம்.
வாழ்க்கை நம்மை எங்கோ அடித்து செல்கிறது.
சில நேரம் அழுகிறாம்,சில நேரம் சிரிகிறோம்,
சில நேரம் தோற்கிறோம்,சில நேரம் ஜெய்க்கிறோம்.
திரும்பி பார்க்கும் போது,
இந்த கூத்து வாழ்க்கை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
முகங்கள் மாறினாலும் அன்பு மாறுவதில்லை,
எல்லைகள் தாண்டினாலும் நட்பு மாறுவதில்லை.
தோல் கொடுக்க தோழர்கள் உண்டு,
அன்பு பாராட்ட உறவுகள் உண்டு.
வாழ்க்கையை வாழ்ந்து அழிப்போம்,
சாகும் வரைபோராடுவோம்,பயமில்லை ,கலக்கமில்லை.
காலனையும் காலத்தையும் சிரித்துக்கொண்டே வரவேற்போம்.

சமூக வலைதளங்கள் (facebook)

முன்பெல்லாம்
என்னுடைய கிறுக்கல்களையும்,
சுய துக்கங்களையும்
என் டைரியில் கிறுக்கிக்கொண்டிருந்தேன்,
இப்போது பக்கத்து வீட்டுக்காரன் டைரியில்
கிறுக்கி காத்துகொண்டிருக்கிறேன்.
அவனுடைய பதிலுக்காக!!!

இடைவெளி

இடைவெளிக்கு
மதிப்பில்லையென்று யார் சொன்னது?
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும்
இடையேயான இடைவெளிதான்
அவர்களின் காதலை இனிக்க செய்து
கல்யாணத்தை புளிக்க செய்கிறது!!!

அந்த தீபாவளி

அப்போதெல்லாம்
இரண்டு ஒட்டுப்போட்ட டவுசர்
இரண்டு நைந்த சட்டை என
வருடத்தை ஓட்டிய நான்
புது துணிகளுக்காக தீபாவளியை
எதிர்பார்த்து காத்திருந்தேன்,

வெளியூரில் வேலைபார்க்கும்,படிக்கும்
அண்ணண் மற்றும் நண்பர்களை
சந்திக்க கிடைக்கும் அந்த அரிய
சந்தர்பத்திற்காக தீபாவளியை
எதிர்பார்த்து காத்திருந்தேன்,

வருடம் முழுவதும் உழைத்த
அம்மாவுக்கும்,அப்பாவுக்கும்
தீபாவளி அன்றுதான் ஓய்வுநாள்,
அவர்கள் செய்துதரும்
அந்த பலகாரத்திற்காக தீபாவளியை
எதிர்பார்த்து காத்திருந்தேன்,

அப்பா எடுத்து தரும்
புத்தாடைகளை நண்பர்கள்
ஏற்றுகொள்வார்களா என்ற
எதிர்ப்பார்ப்புகளுடன்  தீபாவளியை
எதிர்பார்த்து காத்திருந்தேன்,

மத்தாப்புகளும்,வாணவேடிக்கைகளும்
வாங்க முடியாமல் போனாலும்
போன தீபாவளிக்கு நண்பன் வெடி தந்தமாதிரி
இந்த தீபாவளிக்கும் தருவானோ? என தீபாவளியை
எதிர்பார்த்து காத்திருந்தேன்,

வருடம் ஒருமுறை குடும்பத்தோடு
அமர்ந்து இலை விரித்து சாப்பிடும்
அந்த ஒரு நாளுக்காக தீபாவளியை எதிர்பார்த்து
காத்திருந்தேன்,

இப்படி எல்லா எதிர்ப்பார்ப்புகளும் சேர்ந்து
தீபாவளியை ஒரு திருவிழாவாக
காண்பித்தன,உற்சாகம் கரைபுரண்டு
ஓடச்செய்தன.

ஆனால் இன்று என்னிடம்
எல்லாம் இருப்பதால்,
எதிர்பார்ப்பே இல்லாமல்
ஒரு சாதாரண வார விடுமுறை போல்
சிறு புன்னைகையுடன்
வார்த்தை வாழ்த்துகளுடன்
என் தீபாவளி முடிந்துவிடுகிறது.


அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!!!