அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

கதைநேரம் : ஆசை

1 comment


இந்த உலகமே ஆசை என்னும் சக்கரத்தின் மீது ஓடிக்கொண்டிருக்கிறது.இந்த உலகத்தில் ஆசை இல்லாத மனிதனே இல்லை.எல்லோருக்கும் அவர் அவர்களின் வசதியை பொருத்து ஆசை இருக்கிறது.ஆனால் ஆசையே துன்பத்திற்கு காரணம் என புத்தர் சொல்கிறார்.அப்போ ஆசைபடுவது தவறா?

இந்த கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ள ஆசை பற்றிய கொஞ்சம் புரிதல் வேண்டும்.ஆசை என்பது என்ன?

ஆசை என்பது நம் மனதை திருப்திபடுத்தும் பொருளை அடைவது அல்லது செயலை செய்வது.ஒரு கார் அழகாக இருக்கிறது என்பதால் அதன் மீது ஆசைபடலாம் அல்லது அது நம்மிடம் இருந்தால்தான் நாம் சமுதாயத்தில் பெரிய மனிதனாக தெரிவோம் என்ற கெளரவத்திற்காக ஆசைபடலாம்.இது மட்டுமா.நாம் ஆசைபட்ட பொருளின் மீது நம் உடல்  பொருள் ஆன்மா என் எல்லாவற்றையும் வைத்து விடுகிறோம்.

உண்மையில் மனிதன் தன் ஆன்மாவையும் உயிரையும் புறப்பொருளின் மீது வைக்க  நினைப்பதுதான் ஆசைக்கு உண்மையான அர்த்தம்.

சரி ஆசை எப்படி துன்பத்திற்கு காரணமாக முடியும்?

ஆசை வந்தவுடன் நாம் கனவுகான ஆரம்பிக்கிறோம்.அவை செயல்களாக மாற ஆரம்பிக்கின்றன.ஆசை நிறைவேறிய பின் ஆசைபட்ட பொருளின் மீதான ஈர்ப்பு குறைய ஆரம்பிக்கிறது.இதற்காகவா இவ்வளவு போராடினோம் என குற்ற உணர்வு ஆரம்பிக்கும்.

சில நேரம் ஆசையை நிறைவேற்ற தவறான செயல்களை செய்ய ஆரம்பித்து வாழ்க்கையையே தொலைத்துவிடுகிறோம்.சில ஆசைகளினால் வாழ்க்கையை இயல்பாக வாழமுடியாமல் இயந்திரமாக வாழ ஆரம்பித்துவிடுகிறோம்.

உண்மையில் ஒரு ஆசையின் பின் மற்றொரு ஆசை என ஒன்றன் பின் ஒன்றாக நம் வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்கிறது.ஆசையின் காரணமாக கடனாளியாக,குற்றவாளியாக, இயல்பு வாழ்க்கையை தொலைத்தவர்கள் அதிகம். ஆசை ஆசையாக காதலித்து வாழ்க்கையை தொலைத்தவர்கள்தான் இங்கு அதிகம்.

உண்மையில் ஆசை நம் இயல்பு வாழ்க்கை தின்று விடுகிறது.இதற்கு அருமையான கதை ஒன்று சொல்வார்கள்.

ஒருத்தர் அருமையான கார் ஒன்றை வாங்க ஆசைபட்டார்.அதற்காக குடும்பம் பிள்ளைகள் என அனைத்தையும் மறந்து கடினமாக வேலை செய்தார்.இறுதியாக அவர் அந்த காரை வாங்கி தன் வீட்டின் முன் நிறுத்தி நிம்மதி பெரு மூச்சு விட்டுக்கொண்டார்.

அடுத்த நாள் காலையில் எழுந்து தன் காரை பார்க்க வந்த போது அவருடைய மகள் அந்த புது காரின் மேல் கல்லால் எதையோ கிறுக்கிக்கொண்டிருந்தாள்.அதை பார்த்த அவருக்கு தன் உயிரின் மேல் கிறுக்குவது போல் இருந்தது.ஆத்திரத்தில் அருகில் இருந்த குச்சியை எடுத்து மகளின் கைகளின் மேல் ஆத்திரம் தீர அடித்தார். இந்த செயலால் மகளின் கையே செயல் இழந்து போனது.மீண்டும் கை செயல்படாது மருத்துவமனையில் சொல்லிவிட்டார்கள்.

அவர் மிக கவலையுடன் தன் வீட்டின் முன் அமர்ந்து அந்த காரை பார்த்துக் கொண்டிருந்தார்.தற்செயலாக மகள் கிறுக்கிய பகுதியை உற்று பார்க்கும் போது அது ஏதோ எழுத்துபோல் இருந்தது.ஓடி போய் அருகில் நின்று பார்த்தார்.

அதில் I love you dad என எழுதி இருந்தது.அவர் நொடிந்து போய்விட்டார்.

இதை தான் புத்தர் ஆசையே துன்பத்திற்கு காரணம் என சொன்னார்.ஆசை ஏதாவது ஒரு வகையில் துன்பத்தில் போய் முடிகிறது.ஆசைபடாமல் எப்படி வாழ்வது என நீங்கள் கேட்கலாம்.

வாழ்க்கையை இரண்டு வகைகளில் வாழலாம்.ஒன்று தேர்ந்தெடுப்பது(choice) மற்றொன்று முக்கியத்துவம் அளிப்பது(preference).எப்போதும் முக்கியத்துவமளித்து வாழுங்கள்.தேர்ந்தெடுத்து வாழாதீர்கள்.

அப்படி தேர்ந்தெடுக்கும் போது உங்களை கேட்டுக்கொள்ளுங்கள்.தேர்ந்தெடுத்த பொருள் இல்லாமல் உங்களால் வாழமுடியாதா?அதன் மேல் உயிரையே வைத்திருக்கிறீர்களா?இரண்டுக்கும் ஆமாம் என்றால் நீங்கள்  ஆசைபடுகிறீர்கள் என்று அர்த்தம்.அது உங்களுக்கு தேவையில்லை.






1 comment :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..