அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

கொள்ளிவைக்கும் இஸ்ரேல்,சுடுகாடாகும் பாலஸ்தீனம்

4 comments
ஒரு துப்பாக்கிகுண்டால்
மரணத்தை பரிசளித்தார்கள்.
மரணத்தை உறுதிசெய்ய -மேலும்
இரண்டுகுண்டுகளை பரிசளித்தார்கள்.
உடல்சிதறி
நிலமெல்லாம் ரத்தகளமாய்
பிணக்குவியல்களுக்கு நடுவே
புனிதமானவர்களின் புனிதமும்,
போராட்டக்காரர்களின் கொள்கைகளும்,
காக்கப்படுகின்றன
.



தினசரி செய்தித்தாள்களை பார்க்கும் போது ஒரே வெறுப்பாக இருக்கிறது.இஸ்ரேல் பாலஸ்தீன போரால் தினமும் கொத்து கொத்தாக மனித உயிர்கள் போய்க்கொண்டிக்கின்றன.எதையும் செய்யமுடியாமல் உலகத்தோடு சேர்ந்து நாமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

சொந்த தாய்மண்ணை அபகரித்துவிட்டார்கள் என்று பாலஸ்தீனமும்,தங்களை எதிர்க்கிறார்கள் என்று இஸ்ரேலும் காரணம் சொல்லிக்கொண்டு கொல்வது என்னவோ அப்பாவி பொதுமக்களைத்தான்.
இங்கே மனிதர்களை மனிதர்களாக பார்க்காமல் அர்ப்பமான கொள்கைகள்,வரலாறு,மதரீதியான நம்பிக்கை என இரு சாரராக பிரிந்துகொண்டு போரை ஊக்குவிக்கும் கூட்டம் தான் அதிகமாக இருக்கிறார்கள்.அதுவும் ஒரே நாடு, ஒரே இனம்,ஒரே மக்கள் என்று சொல்லும் இந்தியர்கள் கூட அணி அணியாக பிரிந்து நியாய தர்மம் பேசி ஏதோ ஒரு தரப்பை ஊக்குவிப்பதுதான் வேதனைதரும் விசயம்.

நாம் பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு பேசும் நியாய தர்மங்கள் துப்பாக்கியின் பிடியில் சிக்கி தவிக்கும் அப்பாவி மக்களை ஒரு போதும் காப்பாற்ற போவதில்லை.பல்லாயிரகணக்கான மக்களை கொன்று அவர்களின் சவக்குழியின் மேல் அமைதி பூங்காவைகட்ட நினைக்கிறது இஸ்ரேல்.கடந்த கால துரோகங்களையும்,மத உணர்வுகளையும் காரணம் காட்டி தன் இனத்தை தானே இழந்து கொண்டிருக்கிறது பாலஸ்தீனம்.

இவையெல்லாம் நம் மனிதன்மையை கேள்விக்குறிகளாக்குகின்றன.இங்கே மனித உயிர்கள் புழுவினும் கீழ்நிலைகளாக கருதி கொல்லப்படுகின்றன.வேதனையிலும் வேதனை தரும் விசயம் இதை உலகமே கைகட்டி,வாய்பொத்தி வேடிக்கை பார்ப்பதுதான்.ஒரு லட்சம் யூதர்களை இனப்படுகொலை செய்தான் ஹிட்லர்.ஆறு லட்சம் தமிழர்களை கருவறுத்தான் ராஜபக்சே.இப்போது இஸ்ரேல் செய்வதுமட்டும் புனிதப்போராகவா ஆகிவிடப்போகிறது.

உலகின் அதிபயங்கர புத்திசாலிகள் என மார்த்தட்டிக்கொள்ளும் யூத இஸ்ரேலியர்களே மக்களை கொத்துக்கொத்தாக கொல்வதுதான் புத்திசாலித்தனமோ?உயிரின் வலி,போரின் வக்கிரங்களை தலைமுறை தலைமுறைகளாக அனுபவித்த நீங்கள் மற்றவருக்கு அதையே பரிசளிப்பது தகுமோ?

பாலஸ்தீன போராளிகளே நீங்களும் ஒன்றும் புனிதர்கள் அல்ல.உங்கள் கொள்கைகளும் ஒன்றும் புனிதமானவை அல்ல.உங்கள் கொள்கைகள் வெறும் இடத்திற்காகதான்.உங்கள் கொள்கைகளால் போவது என்னவோ அப்பாவி உயிர்கள்தான்.போராட்டத்தை கைவிடுங்கள் என்று நான் சொல்லவில்லை.போராடும் பாதையை மாற்றிக்கொள்ளுங்கள்.கத்தியின்றி ரத்தமின்றி அறவழியில் போராடுங்கள்.மிச்சம் இருப்பவர்களாவது வாழட்டும்.

அமைதியென்பது சுடிகாட்டிலும் இருக்கிறது,பூந்தோட்டத்திலும் இருக்கிறது.உங்கள் துப்பாக்கிகளும் கொள்கைகளும் உங்களுக்கு கொடுக்கப்போவது என்னவோ மயானத்தைதான்.நாடு,இன கொள்கைகளை தாண்டி மனிதனாக வாழப்பழகுங்கள்.மழைக்கு இரவில் ஒதுங்கும் ஒரு ஆட்டுக்குட்டியை தன்வீட்டீல் அனுமதிக்காத மனிதன் உலகில் இல்லை.ஆனால் வீடில்லாத, வாழ வழியில்லாத, சக மனிதனை அரவணைத்து வாழத்தெரியாத மனிதநேயத்தை என்னவென்று சொல்வது.

இந்த பூமி எல்லோருக்கும் சொந்தம்.அதன் மேல் கிறுக்கியிருக்கும் எல்லைக்கோடுகள் மனிதனை தடுத்துவிடமுடியாது.போரை நிறுத்துங்கள்.எல்லை தாண்டி,கொள்கை தாண்டி மனிதநேயத்துடன் மனிதனாக வாழுங்கள்.மற்றவரையும் வாழவிடுங்கள்.நாளைவிடியும் பூமி அமைதிக்காக விடியட்டும்.



படிக்கவேண்டிய புத்தகங்கள்








4 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..