அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

நாம் மறந்த காந்தி

No comments
ஒவ்வொரு வருடமும் நாம் காந்தியடிகளின் பிறந்த நாளை ஒரு தலைவரின் பிறந்த நாளாக, நாட்டின் அடையாளமாக, ஒரு அலங்கார திருவிழாவாக கொண்டாடி கடந்து சென்று விடுகிறோம் .காந்தி என்ற அகிம்சைவாதியை, தன்னலமற்ற மனிதனை, ஆளுமை மிக்க தலைவனை பற்றி படிக்க மறந்துவிட்டோம்.
             அகிம்சையின் ஆழத்தை உலகுக்கு உணர்த்தியவர்கள் மூன்று பேர். அவர்கள் புத்தர், மகாவீரர், மற்றும் காந்தியடிகள். சமகாலத்திய நமக்கு புத்தர், மகாவீரரை சந்திக்க வாய்ப்பில்லாமல் இருந்தாலும் காந்தியின் வாயிலாக அகிம்சையின் பலத்தை உணர முடிகிறது . ஒரு முறை இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலிடம் செய்தியாளர்கள் இப்படிக் கேட்டார்கள், "உங்களால் ஏன் காந்தியை ஒன்றும் செய்ய முடியவில்லை? " அதற்கு சர்ச்சில் சொன்னார். காந்தி கத்தியை தூக்கியிருந்தால், துப்பாக்கியை காட்டி அடக்கி இருப்போம். துப்பாக்கியை காட்டியிருந்தால், பீரங்கியை காட்டி அடக்கி இருப்போம். காந்தியோ அகிம்சையை ஆயுதமாக ஏந்தி போராடுகிறார். அகிம்சையை வெல்லும் ஆயுதம் இன்னும் கண்டுபிடிக்கபடவில்லை.அதனால் காந்தியை அடக்க முடியவில்லை என சர்ச்சில் பதிலளித்தார். இது தான் அகிம்சையின் பலம். உண்மையின் பலம். அதை நடைமுறையில் சாத்தியபடுத்தி வெற்றி கண்ட காந்தியடிகள் பலம்.
                     ரோட்டில் ஒரு மனிதன் அடிபட்டு கிடந்தால் அதை ஒரு காட்சியாக, எளிதாக கடந்துவிடும் மனப்பான்மை உள்ள காலகட்டத்தில், தன் நாட்டு மக்கள் உண்ண உணவில்லாமல் , உடுத்த உடையில்லாமல் இருப்பதை பார்த்து ஒரு முழ வேட்டியை ஆடையாக ஏற்று, கடைசி வரை தன் கொள்கையிலிருந்து மாறாமல் வாழ்ந்தார். நம்மால் ஒரு அரசனை யோ, அரசியையோ, குறைந்த ஆடையோடு பார்க்க போக முடியுமா? ஒரு முறை சர்ச்சில் காந்தியை 'அரை நிர்வாண பக்கிரி என்று கூறி ஏளனம் செய்தார். ஆனால் உலக வரலாற்றில் இங்கிலாந்து ராணியை குறைத்த ஆடையுடன் சந்தித்த முதல் மனிதர் ஆனார்.காந்திக்காக அரண்மனையின் பாரம்பரியங்கள், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன என்பது தான் உண்மை. தன்மானத்துடன் கட்டும் ஒரு முழத்துண்டே ஒரு மனிதனின் உண்மையான உடை என்ற தன் கொள்கையை வாழ்ந்தே நிரூபித்தார்.
                  மற்றொரு முறை காந்தியை ஒருவர் கடுமையாக திட்டி ஒரு கடிதம் எழுதினார். அதை சலனமில்லாமல் படித்த காந்தி, அதில் இருந்த குண்டூசியை மட்டும் வைத்துக் கொண்டு கடிதத்தை கிழித்துப் போட்டார். இதை பார்த்து அருகில் இருந்தவர் கேட்தற்கு 'தனக்கு தேவையானதை கடிதத்தில் இருந்து எடுத்து கொண்டதாகவும், தேவையற்றதை கிழித்து போட்டதாகவும் பதிலளித்தார்.' தன்னை நோக்கி எறியப்பட்ட அத்தனை வசைகளையும் , புறக்கணிப்புகளையும் அமைதியாக , அகிம்சை வழியில் கடந்து சென்ற மாபெரும் தலைவர் .
                           அதுவரை இரத்தத்தால் சுதந்திர வரலாறை எழுதியவர்கள் மத்தியில், கத்தியின்றி ரத்தமின்றி ஒரு போராட்டத்தை நடத்தி , அகிம்சை என்னும் மயிலிறகால் இந்தியாவின் சுதந்திரத்தை வரலாற்றில் எழுதிய ஒரு ஆளுமைமிக்க தலைவர் மகாத்மா காந்திஜி. எத்தனையோ மனிதர்கள் சுய சரிதை எழுதியுள்ளார்கள். ஆனால் காந்தியைப் போல் ஒளிவுமறைவின்றி தன் வாழ்க்கையை பந்தியில் பரிமாறியவர்கள் யாரும் இல்லை. நாம் படிக்க வேண்டியது காந்தியின் வரலாறு இல்லை, மகாத்மாவை பற்றி இல்லை, உலகத்தை தன் கொள்கையால், ஆளுமையால் புரட்டிப் போட்ட மாபெரும் மனிதரை பற்றி.

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..