அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

தன்னம்பிக்கை நேரம் :: எங்கிருந்து ஆரம்பிப்பது?

2 comments


நம்மில் சிலருக்கு ஒரு விசயத்தை எங்கிருந்து ஆரம்பிப்பது? எப்படி ஆரம்பிப்பது? என்பதே தெரிவதில்லை.முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள்.ஒரு விசயத்தின் ஆரம்பமே தவறு என்றால் முடிவு மட்டும் எப்படி சரியாக இருக்க முடியும்.நாம் தொடங்கும் இடத்தை பற்றி சரியாக யோசிக்கவில்லை என்றால் முடிவில் காணமல் போய்விடுவோம்.உண்மையில் சிறப்பான திட்டமிட்ட தொடக்கம் பாதி வெற்றிக்கு சமம் என்பார்கள்.

சரி எங்கிருந்து ஆரம்பிப்பது,எப்படி ஆரம்பிப்பது?
உண்மையில் எல்லா மனிதர்களுக்கும் இரண்டு வகையான வழிகள் உண்டு.ஒன்று சிந்தனை வழி மற்றொன்று செயல் வழி.நம்மில் பெரும்பாலானவர்கள் எதையும் சிந்திக்காமல் செயல்பட ஆரம்பித்துவிடுவோம்.ஆனால் வெகு சிலரே சிந்தித்துபின் செயல்பட தொடங்குகிறோம்.

நம்மில் எத்தனை பேர் காலையில் எழுந்தவுடன் அன்றைய நாளைப் பற்றி சிந்தித்து பின் செயல்பட தொடங்குகிறோம்.அதாவது நம் இலக்குகள் என்ன?திறமைகள் என்ன?பிரச்சனைகளுக்கான தீர்வுகள் என்ன?என்பதை பற்றி சிந்தித்திருக்கிறோம்.ஒரு நாளில் நாம் செய்யப்போகும் வேலைகள் எந்த இலக்கை நோக்கி நகர வேண்டும்? என்பதில் நமக்கு தெளிவு இல்லை என்றால் அந்த வேலையின் பலன் தான் என்ன?

இந்த உலகத்தில் உள்ள எல்லா விசயங்களும் மேம் போக்காக எளிமையாக இருந்தாலும் அடிப்படையில் மிகவும் சிக்கலானவை.உதாரணமாக வீட்டில் மனைவியின் சமையலை எளிமையாக குறை சொல்லிவிடலாம்.ஆனால் அதை நாம் செய்யும் போது தான் உணர முடியும் அதன் கடினத்தை.கொஞ்சம் யோசித்து பார்த்தால் சமையல் பல பொருட்களின் ஒரு சிக்கலான கலவை.அதில் ஒன்று குறைந்தாலோ அல்லது கூடினாலோ முழுவதும் பாலாகிவிடும்.எனவே சிந்திக்கும் போது விசயங்களின் அடி ஆழம் முழுமையாக தெரியவரும்.

மேலும் நான் பலரை பார்த்திருக்கிறேன். உடல் எடையை குறைக்கிறேன் பேர் வழி தங்களை உடலை தாங்களே வருத்திக்கொள்கிறார்கள்.உண்மையில் அவர்கள் செய்ய வேண்டிய முதல் வேலை ஆழமாக சிந்திக்க வேண்டியது.அதாவது உண்ணும் உணவுகள்,உண்ணும் விதம் என எல்லாவற்றைப் பற்றியும் ஆழமாக சிந்தித்து பின் செயலில் இறங்க வேண்டும்.

உண்மையில் நம் உடம்பை கட்டுப்படுத்துவது மூளை.அதற்கு சரியான கட்டளைகள் இட்டுவிட்டால் அது நம் உடல் முழுவதையும் அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடும்.ஆனால் நாம் என்ன செய்கிறோம்? ஓடு என்று மூளைக்கு தற்காலிக கட்டளையிடுகிறோம்.உடனே உடல் ஓடிக்கொண்டே இருக்கும்.ஆனால் எதற்காக ஓடுகிறோம் என்று மூளைக்கு தெரியாது.சாப்பிடாதே என்று வாய்க்கு கட்டளையிடுகிறோம்.அதை வாய் கேட்பதே இல்லை.இங்கு தான் எல்லோரும் தோற்று போய்விடுகிறோம்.உண்மையில் உடல் எடை என்பது பல விசயங்களின் சிக்கலான தொகுப்பு.

நம் கண் ஒரு சுவையான சிக்கன் வறுவலை பார்க்கிறது.உடனே மூளைக்கு தகவல் போகிறது.உடனே மூக்கும் தன் பணியை ஆரம்பித்து மூளைக்கு தகவல் போகிறது.எல்லா தகவல்களையும் ஆராய்ந்து சிக்கன் வேணுமா?வேண்டாமா? என்று மூளை முடிவு செய்கிறது.வேண்டும் என முடிவாகி நாக்கு மற்றும் குடலில் அமிலங்கள் சுரந்து உணவை செரிக்க தயாராகின்றன.உற்றுப்பார்த்தால் நன்றாக புரியும் நம் மூளைதான் எல்லாவற்றுக்கும் காரணம்.நம் மூளைதான் முதலாளி, உடம்பு வெறும் தொழிலாளர்கள்.நமக்குள் என்ன நேர்ந்தாலுல் நாம் பரிசோதிக்க வேண்டிய முதல் ஆள் மூளை.

நம் மூளைக்கு என்ன செய்ய வேண்டும் என்று தீர்மான முடிவெடுக்க நாம் ஒதுக்கும் நேரம்தான் சிந்திக்கும் நேரம்.ஒரு முறை தெளிவாக மூளை முடிவெடுத்து விட்டால் மற்ற எல்லாவற்றையும் அதுவே பார்த்துக்கொள்ளும்.உலகின் ஆகச்சிறந்த செல்வந்தர்கள்,மனிதர்கள்,படைப்பாளிகள் என எல்லோரின் வெற்றிக்கும் காரணம் அவர்கள் சிந்தக்க நேரம் ஒதுக்குகிறார்கள்.உண்மையில் நாம் சிந்தக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க ஆரம்பிக்கிறோம்.நாம் கவனிக்க ஆரம்பிக்கும் போது புரிய ஆரம்பிக்கிறது.எல்லாம் புரிய ஆரம்பிக்கும் போது நாம் வளர ஆரம்பிக்கிறோம்.

காலை எழுந்தவுடன் ஒரு பதினைந்து நிமிடம் அமைதியாக எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அன்றைய நாளைப்பற்றி சிந்திக்க ஆரம்பியுங்கள்.அது உங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை அடையாளம் காட்டலாம்.எனவே எல்லாவற்றையும் சிந்தித்து,நமக்கு தெரிந்த விசயங்களில் இருந்து செயல்பட ஆரம்பித்தால் வெற்றி நிச்சயம்.

2 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..