அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

ஏன் அழுகிறாய்?

அழுகை வந்தால்
இப்போதே அழுதுவிடு முழுவதுமாக
இதற்கு முன் ஒருமுறை அழுதாய்
பிறக்கும் போது,
இப்போதும் அழுகிறாய்,
ஏன் அழுகிறாய்?
எதற்கு அழுகிறாய்?
யாருக்காக அழுகிறாய்?
இங்கே உன் கூக்குரல்
கேட்க ஆளில்லை,
நேரமும் இல்லை,
நீ பார்த்த முகங்கள்
எல்லாம் மகமுடிகள்
என்பதை ஏன் சிந்திக்கவில்லை?
உன் கண்கள் ஏன்
உண்மையை பார்க்கும் திறனிழந்துவிட்டன?
எங்கே உன் நிமிர்ந்த நடை எங்கே?
நேர் கொண்ட பார்வை எங்கே?
யாருக்கும் அச்சாத பார்வை எங்கே?
உற்றுப்பார் எல்லாம் மூலையில்
உட்கார்ந்து ஓலமிடுகின்றன.
நேற்று சிரித்தாய்
இன்று அழுகின்றாய்
நாளை அழுவார்கள்
பொய் வேடதாரிகள்
நல்லவன் என்று!
உன்னையே கேட்டுப்பார்
ஏன் பிறந்தாய்?
எதற்காக உழைக்கிறாய்?
யாருக்காக உழைக்கிறாய்?
என்ன செய்யப்போகிறாய்?
சுயநலன் இல்லாத
உறவும் இல்லை,
பொதுநலன் கொண்ட
உழைப்பும் இல்லாத
உலகம் இது!
இதற்காகவா அழுகிறாய்?
யாருக்கும் உழைக்கப் பிறக்கவில்லை?
யாருக்கும் அடிமையும் இல்லை.
நீ பிறந்தது சாதிக்க!
இடைப்பட்ட காலத்தில்
ஏன் இந்த மயக்கம்?
ஏன் இந்த தயக்கம்?
ஏன் இந்த அழுகை?
ஏன் இந்த ஆர்ப்பாட்டம்?
எது இன்று உன்னுடயதோ,
அது நாளை மற்றொருவருடையாகிறது,
மற்றொரு நாள் அது வேறொருவடையதாகிறது,
இந்த மாற்றம் உலக நியதியாகும்,
என்ற மாறாத கீதை பிறந்த மண்ணில்
பிறந்தா அழுகிறாய்?

யாரடி நீ ?

யாரடி நீ
எங்கிருந்து வந்தாய்
ஏதேதோ பேசினாய்
என் இரவுகளை திருடிக்கொண்டாய்
கனவுகளை ஆக்கிரமித்தாய்
நேரங்களை உன் பிம்பமாக்கினாய்
எண்ணங்களில் கலந்துரையாடினாய்
கல்லாய் இருந்த என்னை
காதல் ரசம் பருக வைத்து
காதல் பித்தம் தெளியுமுன்னே
கானல் நீராய் பறந்து சென்றாய்
இறுதியில் என்னையும்
காதல்வரிகளை கிறுக்கவைத்து
காதலாய் வந்து
கவிதையாய் மறைந்து விட்டாய்.

பீனிக்ஸ்

உலக வரை படத்தில் அது ஒரு தீவுக் கூட்டம்.எப்போதும் துன்பங்களையும் சவால்களையும் மட்டும் எதிர் நோக்கி ஒடிக்கொண்டிருக்கும் ஒர் நீரோடை.தான் செய்வது சரி என பட்டால் மலையுடனும் மோத தாயாராகியவர்கள்.இதற்காகவே இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு வீசி சாம்பாலாக்கினர்.சற்றும் மனம் தளராமல் சாம்பலிலும் சரித்திரம் உருவாக்காலாம் என்று நிருபித்தவர்கள்.மண்வளம் இல்லை ஆனாலும் மண்ணை கடன் வாங்கி கப்பலில் விவசாயம் செய்தவர்கள்.தான் படும் கஷ்டத்தை மற்றவர்கள் பட கூடாது என சுனாமி எச்சரிக்கை மையம் அமைத்து பல நாடுகளை காப்பாற்றியவர்கள்.90 விழுக்காடு இறக்குமதியை மட்டும் வாழும் கனிவளம் இல்லாத ஓர் அப்பாவியான நாடு.தான் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் தனி முத்திரை படைத்து "மனித வளம்" தான் எல்லாவற்றிலும் தலை சிறந்த வளம் என நிருபித்தவர்கள்.உலகின் அதிவேக ரயிலை கண்டுபிடித்தவர்கள் அதனால் தான் என்னவோ சாம்பாலாகி பத்தே வருடங்களில் உலக பொருளாதாரத்தின் உச்சத்தை அடைந்து உலக வல்லரசானது.எல்லோரும் வான்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் காலத்தில் வான்வெளிக்கு லிப்ட் வசதி யேசனை சொன்னவர்கள்.இன்றும் எந்தவித பூகம்பம் வந்தாலும் அதை தாங்கும் வசதியுடன் நவீன கட்டமைப்பு வசதி கொண்ட நாடு அது மட்டும் தான்.
இன்று நிலநடுக்கம்,சுனாமி,அணுவுலை வெடிப்பு என இவற்றின் இடையில் ஒரு சாதாரண வயதான பெண்மணி டீவி ஒன்றிற்கு தரும் பேட்டி"நாங்கள் வயதானவர்கள் சேர்ந்து நகரத்தை மறுசீரமைத்து வருகிறோம்".அது தான் "ஜப்பான்" "யாரையும் நம்பி நாங்கள் இல்லை எங்களை நாங்களே காத்து கொள்வோம்" என்று ஒவ்வொரு முறையும் வரலாற்றின் பக்கங்களை திருப்பி எழுதவைத்தவர்கள்.சாமுராய்கள் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் ஒரு வாசகம் "யாரும் இல்லை என்று நினைக்காதே!நீ இருக்கிறாய் மறந்துவிடாதே கடைசி துளி உள்ளவரை போராடு" உண்மையில் ஜப்பானில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் ஒரு சாமுராய் தான்!."வெறும் சாம்பலில் இருந்து சாம்ராச்சியம் படைக்கலாம் இது தான் ஜப்பான் உலகத்தில் உள்ள அனைவருக்கும் சொல்லும் பாடம்.ஜப்பான் தான் உண்மையான பீனிக்ஸ்.

இடைவெளி

இரு மூச்சுக்கு இடைப்பட்ட இடைவெளி
வாழ்க்கை,
இரு நபர்களுக்கு இடைப்பட்ட இடைவெளி
சுதந்திரம்,
இரு வார்தைகளுக்கு இடைப்பட்ட இடைவெளி
அர்த்தம்,
மனதுக்கும் உடலுக்கும் இடைப்பட்ட இடைவெளி
குழப்பம்,
தோல்விக்கும் வெற்றிக்கும் இடைப்பட்ட இடைவெளி
தன்னம்பிக்கை,
இடைவெளிக்கும் இடைவெளிக்கும் இடைப்பட்ட இடைவெளி
பிரபஞ்சம்,

இடைவெளி அது தான் கடவுள்
ஒளிந்துள்ள இடம்.

தூறல்

டிசம்பர் மாத குளிரோடு லேசான தூறலும் சேர்ந்து பெங்களூர் மாநகரை ஊட்டி போலாக்கிக் கொண்டிருந்தது…

வழக்கம் போல் 7 மணி பஸ்ஸிற்காக கோரமங்களா பார்க்கிங் லாட் அருகே நின்று கொண்டிருந்தேன். எலக்ட்ரானிக் சிட்டி போய் சேர எப்படியும் ஒரு மணி நேரத்திற்கு மேலாகும். நல்ல வேளை இந்த i-pod இருப்பதால் ஓரளவிற்கு சமாளிக்க முடிகிறது.

இந்த மழை ஏன் இங்க பெஞ்சி உயிர வாங்குதுனு தெரியல… மழை வரலைனு யாகமெல்லாம் நடத்தறானுங்க… அங்க வராம இங்க வந்து நம்ம உயிர வாங்குது. அதுவும் ஆபிஸ் போற நேரத்துல.

அருகே கம்பெனி ஐடி கார்டை மாட்டிக் கொண்டு நான்கு, ஐந்து பேர் நின்று கொண்டிருந்தனர். இவனுங்களுக்கு எல்லாம் பெரிய சாப்ட்வேர் இஞ்சினியர்னு பெருமை. இந்த ஐடி கார்டை கம்பெனிக்குள்ள மாட்டினா போதாதா? லைசன்ஸ் வாங்குன நாய் மாதிரி எப்பவும் கழுத்துல மாட்டிக்கிட்டு திரியறானுங்க.

கடைசியாக சுரிதார் அணிந்து கொண்டு புதிதாக ஒருத்தி நின்று கொண்டிருந்தாள். நான் பார்ப்பதை பார்த்து சிரித்தாள்.

ச்சீ என்ன பொண்ணு இவ… யாராவது பார்த்தா… உடனே சிரிக்கணுமா???

பஸ் வந்தவுடன் வேகமாக சென்று ஒரு நல்ல இடம் பார்த்து ஜன்னல் ஓர சீட்டில் அமர்ந்தேன்… i-podல் நேற்று டவுன்லோட் செய்த பெயர் தெரியாத படத்தின் பாடல் ஓடிக்கொண்டிருந்தது.

சரியாக எட்டு மணிக்கு என் சீட்டிலிருந்தேன்… வழக்கம் போல் யாரும் இன்னும் வரவில்லை. இன்று அப்ரைசல் வேறு இருக்கிறது. இந்த முறை ஆன் சைட்டிலிருந்து அப்ரிஸியேஷன் மெயில் வந்திருக்கிறது. அதனால் எப்படியும் இந்த முறை நல்ல ரேட்டிங் கிடைக்கும்.

மேனேஜர் சரியாக பத்து மணிக்கு வந்தார். மற்றவர்கள் அவர் வருவதற்கு 5 நிமிடத்திற்கு முன் வந்தனர். அவரை பொருத்த வரை அனைவரும் ஒரே நேரத்தில் வந்ததாகத்தான் கணக்கு. மற்றவர்களை கேட்டால் டிராபிக் ஜாம் என்ற ஒரு வார்த்தையை சொல்லி தப்பிவிடுவார்கள். 7 மணிக்கு புறப்பட்டால் எப்படியும் 8 மணிக்குள் வர முடியும். 8 மணிக்கு புறப்பட்டு 2 மணி நேரம் டிராபிக்கில் சிக்கி வரவே அனைவரும் விரும்புகின்றனர். தலை சரியில்லாத இடத்தில் மற்றவர்களை சொல்லி பயனில்லை.

சரியாக 11 மணிக்கு அப்ரைசல் மீட்டிங். தேவையானவற்றை பிரிண்ட் அவுட் எடுத்து கொண்டு மீட்டிங்கிற்கு சென்றேன். உள்ளே மேனஜர் தயாராக இருந்தார். இந்த முறையும் அப்ரைசலில் எல்லா டாஸ்கிற்கும் “C” போட்டிருந்தார்கள். அதற்கு அவர் சொன்ன காரணம் டீம் மக்களோடு சரியாக கலக்காமலிருக்கிறேனாம்.

சரியாக வேலை செய்யவில்லை என்றால் சரி. ஆனால் மக்களோடு பழகவில்லை என்று அவர் சொல்வது சும்மா ஒரு சப்பைக்கட்டு!!! இவர்கள் வேலை செய்வது போல் நடிப்பவர்களைத்தான் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். ஆனால் உண்மையாக வேலை செய்பவர்களை என்றும் மதிக்கமாட்டார்கள்.

மதியம் சரியாக பனிரெண்டு மணிக்கு சாப்பிட கிளம்பினேன்.

“கார்த்திக்… இன்னைக்கு பிராஜக்ட் பார்ட்டி. பஸ் 12:30க்கு வரும். இப்ப எங்க போற?” அக்கரையாக விசாரித்தாள் ஹாசினி.

“சாரி… நான் வரலை. நான் தான் மெயில்லையே சொல்லிட்டனே… எனக்கு இந்த பார்ட்டி எல்லாம் பிடிக்காதுனு” சொல்லிவிட்டு வேகமாக சாப்பிட சென்றேன்.

சாப்பிட்டுவிட்டு என் சீட்டிற்கு வந்த போழுது என் ப்ளோர் முழுதும் விரிச்சோடி கிடந்தது. 2 மணிக்கு வீட்டிற்கு கிளம்பினேன். வீட்டில் தனியாக என்ன செய்வதென்று தெரியாமல் கிடைத்த ஒரு ஆங்கில நாவல் படிக்க ஆரம்பித்தேன். எப்போழுது தூங்கினேனென்றே தெரியவில்லை. தூங்கி எழுந்திரிக்கும் பொழுது மணி 8 ஆகியிருந்தது.

அருகே இருக்கும் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு வந்தேன். டிவியை ஆன் செய்து ஒரு மணி நேரத்தில் 120 சேனல்களையும் 40 முறை மாற்றி மாற்றி பார்த்துவிட்டு தூங்கிவிட்டேன். 6 மணிக்கு அலாரம் அதன் வேலையை சரியாக செய்ய 7 மணிக்கு பஸ் ஸ்டாப்பில் இருந்தேன்.

வழக்கம் போல் பஸ்ஸிற்காக காத்திருப்பவர்கள் இருந்தார்கள். நேற்று புதிதாக வந்திருந்தவளும் அங்கே நின்று கொண்டிருந்தாள். நேற்றை போலவே இன்றும் பார்த்து சிரித்தாள்.

பஸ் வந்ததும் வழக்கம் போல் ஜன்னலோர சீட்டருகே சென்று அமர்ந்தேன்.

“ஹாய்… நான் இங்க உக்காரலாமா?” ஒரு பெண்ணின் குரல்.
திரும்பி பார்த்தேன். அவள் என் பதிலை எதிர்பார்க்காமல் அருகில் அமர்ந்தாள்.

வழக்கத்தைவிட i-podல் சத்தத்தை கொஞ்சம் அதிகப்படுத்தினேன். அதை புரிந்து கொண்டு எதுவும் பேசாமல் ஒரு ஆங்கில நாவலை கையில் வைத்து படிக்க ஆரம்பித்தாள். வண்டி வழக்கத்தைவிட சீக்கிரம் சென்றாலும் ஏதோ ஒரு யுகம் போனது போலிருந்தது.

தினம் செய்யும் வேலையையே செக்குமாடு போல் செய்துவிட்டு 8 மணிக்கு ஆபிஸிலிருந்து வீட்டிற்கு கிளம்பினேன். அடுத்த நாளும் அதை போலவே என் அருகில் அமர்ந்து பயணம் செய்தாள். இதுவே ஒரு வாரம் தொடர்ந்தது.

அன்றும் லேசான தூறல் போட்டுக்கொண்டிருந்தது. நடைபாதையிலிருந்து கீழிறங்கி பஸ்ஸிற்காக காத்துக்கொண்டிருந்தேன். வலதுபக்கம் நின்றிருந்த ஒரு ஜோடி ரோட்டில் நிற்கிறோம் என்ற எண்ணமில்லாமல் ஒருவர் கையை ஒருவர் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தனர். என் கோபம் வழக்கத்தைவிட கொஞ்சம் அதிகமாகவே வந்தது.

இதுங்களுக்கு எல்லாம் அறிவே இல்லையா? சாப்ட்வேர் இஞ்சினியர்னா பெருசா அமெரிக்கால இருக்கற நினைப்பு. இதுங்களாலதான் எல்லாருக்கும் கெட்டப்பேரு!!! திடிரென்று யாரோ என் கையை பிடித்து பின்னால் இழுத்தார்கள். திரும்பி பார்ப்பதற்குள் நான் நின்று கொண்டிருந்த இடத்தில் ஒரு ஆட்டோ நின்று கொண்டிருந்தது. கொஞ்சமிருந்தால் மேலே ஏத்தியிருப்பான். இந்த பெங்களூர்ல ஆட்டோக்காரங்களுக்கு அறிவே இருக்காது.

சரி, பின்னால் இழுத்தது யாரென்று பார்த்தால் அவள் நின்று கொண்டிருந்தாள். சைட்ல இருந்த அந்த ஜோடியப் பாத்துட்டிருந்த நேரத்துல இந்த மாதிரி ஆயிடுச்சு. அவளுக்கு நன்றி சொல்லலாமா என்று யோசித்து கொண்டிருக்கும் போதே பஸ் வந்து சேர்ந்தது.

எப்போழுதும் அமரும் இடத்தில் சென்று அமர்ந்தேன். அவளும் வந்து அமர்ந்து கையில் நாவலை எடுத்தாள்.

“ரொம்ப தேங்கஸ்ங்க…” தயங்கியவாறே சொன்னேன்.

“ஓ!!! உங்களுக்கு பேச வருமா??? நீங்க ஊமைனு இல்ல நினைச்சேன்” புத்தகத்தை பையில் வைத்து கொண்டே சொன்னாள்.

“இல்லைங்க…சாரி. நான் உங்களை ரொம்ப இன்சல்ட் பண்ணிட்டேனு நினைக்கிறேன்”

“ஐயய்யோ அதெல்லாம் ஒன்னுமில்லைங்க. ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க…
பை த வே, ஐ அம் ஆர்த்தி”

“ஐ அம் கார்த்திக்”

இன்று பஸ் பயணத்தின் 60 நிமிடங்களும் 60 நொடிகளைவிட குறைவாக தெரிந்தது. 60 நிமிடத்தில் வாழ்க்கை வரலாறையே சொல்ல முடியும் என்று இன்று தான் உணர்ந்தேன்.

பஸ்ஸிலிருந்து இறங்கியவுடன்…

“கார்த்திக்… உன் கூட நான் சாப்பிட வரலாமா? தனியா சாப்பிட போர் அடிக்குது. என் டீமெட்ஸ் எல்லாம் பத்து மணிக்குதான் வருவாங்க”

“உங்களுக்கு எதுவும் பிராபளம் இல்லைனா வாங்க”

“ஏன் ரொம்ப ஃபார்மலா பேசறீங்க??? நீ, வா, போனே பேசலாம்”

“சரிங்க”

“பாத்திங்களா??? திரும்பவும் வாங்க போங்கனு சொல்றீங்க”

“சரி… போலாமா?”

சாப்பிட்டு விட்டு சீட்டிற்கு வந்து வேலை செய்ய ஆரம்பித்தேன். இன்று நாள் போனதே தெரியவில்லை.

அடுத்த நாள் மீண்டும் பஸ் பயணம்…

“ஏய்!!! நேத்து மதியம் உன்ன கேண்டின்ல பாத்தேன்… தனியா சாப்பிட்டு இருந்த… உன் பிராஜக்ட் மேட்ஸ் யாரும் வரலையா?”

“நான் எப்பவும் தனியாதான் சாப்பிடுவேன்”

“ஏன்?”

“யாருக்கும் தொந்தரவு வேண்டாம்னுதான். எனக்கு உங்களை மாதிரி எல்லாம் பேச வராது”

“யார் சொன்னா அப்படியெல்லாம். என் கூட வேணா வரியா?”

“வேணாம். உங்கூட உன் பிரண்ட்ஸ் எல்லாம் இருப்பாங்க. எனக்கு அன்கம்ஃபர்டபுலா இருக்கும்”

“இல்ல… யாரும் வர மாட்டாங்க. உன் செல் நம்பர் தா. நான் மதியம் கூப்பிடறேன்”

“ஏன்கிட்ட செல் போன் இல்ல”

“என்னது செல் போன் இல்லையா??? எத்தனை வருஷம் சாப்ட்வேர் இஞ்சினியரா இருக்க?”

“3 வருஷம். ஏன் செல் போன் இல்லனா வாழ முடியாதா? எனக்கு தான் எக்ஸ்டென்ஷன் இருக்கு இல்ல. அதுக்கே எவனும் கூப்பிட மாட்டான். எனக்கு எதுக்கு செல் போன்? எப்பவாவது ஊர்ல இருந்து கூப்பிடுவாங்க. அவ்வளவுதான்”

“சரி உன் எக்ஸ்டென்ஷன் சொல்லு… ” குறித்து கொண்டாள்

காலையும், மதியமும் அவளுடன் சாப்பிட்டேன்… இன்றும் நாள் பொனதே தெரியவில்லை.

அடுத்த நாள்…

“ஏன் இப்படி வயசானவன் மாதிரி டல் கலர்ல சட்டை போடற??? ஒழுங்கா ப்ரைட்டா சட்டை போட்டா என்ன?”

“ஏன் இந்த கலர்க்கு என்ன குறைச்சல். நான் பொதுவா கலரே பாக்க மாட்டேன். போய் எது பிடிச்சியிருந்தாலும் எடுத்துக்குவேன்”

“சரி… இந்த வாரம் நம்ம ரெண்டு பேரும் ஷாப்பிங் போகலாம். உனக்கு செல் போன் வாங்கனும்.. அப்பறம் நல்லதா ஒரு நாலு அஞ்சு சட்டை வாங்கனும்”

“எனக்கு எதுக்கு செல் போனெல்லாம்?”

“நேத்து நைட் உங்கிட்ட பேசலாம்னு பாத்தேன்… ஆனால் உங்கிட்ட போன் இல்லாததால பேச முடியல”

“நிஜமாவா?”

“ஆமாம்… சத்தியமா!!! இந்த வாரம் கண்டிப்பா போய் வாங்கறோம்”

“சரி…”

வார இறுதியன்று கடைக்கு சென்றோம்…

“லேட்டஸ்ட் மாடலா பாத்து வாங்கிக்கோ… இல்லைனா பின்னாடி மாத்த வெண்டியிருக்கும்”

“எனக்கு சாதரண மாடலே போதும்… காஸ்ட்லியா எல்லாம் வேண்டாம்”

“நீ சும்மா இரு…நான் செலக்ட் பண்றேன்… உனக்கு ஒன்னும் தெரியாது”

“சரிங்க… நீங்களே எடுங்க”

கடைசியாக பத்தாயிரத்தி சொச்சத்திற்கு ஒரு செல் பொன் வாங்கி ஏர்டெல் கனெக்ஷனும் வாங்கினேன். அதிலிருந்து அவள் நம்பருக்கு போன் செய்து அவள் போனை என்னிடம் குடுத்து பேச சொன்னாள். பக்கத்து பக்கத்துல இருந்து செல் பொனில் பேசுவது அசிங்கமாக இருந்தது… ஆனாலும் அவள் அதை பற்றி கவலைப்படவில்லை.

“பாத்தியா… உன் போன்ல ஃபர்ஸ்ட் பேசனது நான் தான், ஃப்ர்ஸ்ட் பண்ணது என் நம்பருக்குத்தான்”

“சரி சரி… எல்லாரும் ஒரு மாதிரி பாக்கறாங்க… வா போகலாம்”

அன்றே 5 புது சட்டைகள் வாங்கினோம். ஒவ்வொன்றும் 1500க்கு மேல்.

வீட்டிற்கு சென்றவுடன் போன் செய்து பேசினாள்…

திங்கள் காலை அலுவலகத்தில்

“கார்த்திக்… புது சட்டையெல்லாம் சூப்பரா இருக்கு…கைல ஏதோ செல் போன் மாதிரி இருக்கு” ஹாசினி

“ஆமாம்… நேத்துதான் வாங்கினேன்”

“எங்களுக்கு எல்லாம் நம்பர் தர மாட்டீங்களா?” ராஜிவ்

“உங்களுக்கு இல்லாமலா… இந்தாங்க நோட் பண்ணிக்கோங்க…”
அனைவரும் அவர்கள் நம்பரிலிருந்து மிஸ்ஸிடு கால் குடுக்க அனைவரின் நம்பரையும் சேவ் செய்தேன்.

ஆர்த்தியிடமிருந்து 11 மணிக்கு போன் வந்தது.

“கார்த்திக்… இன்னைக்கு எனக்கு பிராஜக்ட் பார்ட்டி…
நான் மதியம் உங்கூட லஞ்ச்க்கு வர முடியாது. நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ”

“ஓகே… நான் பாத்துக்கறேன்”

“கார்த்திக்… புது போனெல்லாம் வாங்கியிருக்கீங்க… ஏதாவது விசேஷமா?” மேனஜர் குரல் பின்னாலிருந்து வந்தது.

“அப்படியெல்லாம் ஒன்னுமில்லைங்க… சும்மா வாங்கனும்னு தோனுச்சு… வாங்கிட்டேன்”

“சரி… இன்னைக்கு டீம் லஞ்ச்… எல்லாரும் ஒன்னா சாப்பிடலாம்னு பிளான். நீயும் கண்டிப்பா வரணும்”

“ஷுர்… கண்டிப்பா வரேன்”

மதியம் அனைவரிடமும் நன்றாக பேசினேன்… எல்லாரும் எவ்வளவு ஜாலியா பேசறாங்க… நான் ஏன் இத்தனை நாள் இப்படி பேசாம போனேன். ரொம்ப தப்பு பண்ணிட்டு இருந்தனோனு தோனுச்சு…

வாழ்க்கையில் ஏதோ பெரிய மாற்றம் நடந்த மாதிரி இருந்தது.

ஒரு மாதம் ஓடியதே தெரியவில்லை. டீமில் அனைவரும் இப்போது நல்ல நண்பர்களாகி விட்டனர். 5 நிமிடம்கூட பேசாமல் இருக்க முடியாது போல் தோன்றியது. அனைத்து மாற்றத்திற்கும் காரணம் ஆர்த்திதான்.

“கார்த்திக் நான் இந்த வீக் எண்ட் சென்னை போறேன்… எப்ப வருவேன்னு தெரியாது. கொஞ்சம் லேட்டானாலும் ஆகலாம். நீ இதே மாதிரி இருக்கணும். ஓகேவா?”

“ஏன் இப்படி சொல்ற? ஏதாவது பிரச்சனையா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல… எங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்ல… அதனால சொன்னேன்”

“சரி… அப்ப அப்ப போன் பண்ணு”

“கண்டிப்பா பண்றேன்”

அவள் சென்றதிலிருந்து முதல் இரண்டு, மூன்று நாட்கள் வேலை செய்யவே முடியவில்லை. பிறகு ஓரளவு சமாளித்தேன். ஒரு வாரம் ஓடியது.
அவளிடமிருந்து போனும் வரவில்லை. அவளும் வரவில்லை. ஒரு மாதமாகிய நிலையில் போன் வந்தது.

“ஹலோ கார்த்திக்கா???”

“ஆமாம். நீங்க யார் பேசறது?”

“நான் ஆர்த்தியோட அண்ணன் பேசறேன்… நீங்க சென்னை அப்போலோ வர முடியுமா? ஆர்த்தி கடைசியா உங்ககிட்ட ஏதோ பேசனுமாம்” அவர் குரலில் நடுக்கம் தெரிந்தது

“கடைசியா???” இந்த வார்த்தையை கேட்டவுடன் இதயம் நின்றுவிடும் போலிருந்தது.
“ஆர்த்திக்கு என்னாச்சு???”

“நீங்க இங்க வாங்க… அத சொல்ற நிலைமைல நாங்க இல்ல… சென்னை வந்தவுடனே இந்த நம்பருக்கு கூப்பிடுங்க… நான் வந்து உங்களை பிக்-அப் பண்ணிக்கிறேன்”

அந்த நம்பர் மனதில் பதிந்தது…

சென்னைக்கு அப்போழுதே நேராக புறப்பட்டேன்…

ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்றார் ஆர்த்தியின் அண்ணன். அவளுக்கு ஸ்பைனல் கார்டில் ஏதோ பிரச்சனையாம். ஒரு வருடமாக ட்ரீட்மெண்ட் செய்து வந்தார்களாம். சரியாகிவிடும் என்று அனைத்து டாக்டர்களும் நம்பிக்கையூட்டிய நிலையில் திடீரென்று அவள் மூளையை பாதித்துவிட்டதாம். எனக்கு எதுவும் விளங்கவில்லை. புதுப்புது வார்த்தைகள். புது உலகம்.

ஹாஸ்பிட்டலில் காய்ந்து போனா பூச்சரமாக இருந்தாள் ஆர்த்தி. ஆனாலும் வாசம் மறையவில்லை. ஓரளவு பேசும் நிலைதான்… என்னை விட்டுவிட்டு அவள் அண்ணன் டாக்டரை பார்க்க சென்றார்.

எனக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் வந்து கொண்டிருந்தது.

“கார்த்தி… அழுவாத!!! எனக்கு கஷ்டமா இருக்கு”

“ஏன் ஆர்த்தி? ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல”

“நான் எப்படியும் பொழைக்க மாட்டேனு தெரியும். ஆனா எங்க வீட்லதான் ரொம்ப நம்பிட்டு இருந்தாங்க. இங்க எல்லாரும் ஒரு மாதிரி பாக்கறாங்கனுதான் நான் பெங்களுருக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்தேன்”
ஒரு நிமிட அமைதிக்கு பிறகு தொடர்ந்தாள்

“அன்னைக்கு உன்ன முதல் தடவை பார்க்கும் போதே… உன் கண்ல ஒரு விரக்தி தெரிஞ்சிது. வாழ்க்கையோட அருமை உனக்கு தெரியலனு என் மனசுல பட்டுச்சு. சரி நான் சாவறத்துக்குள்ள உனக்கு ஏதாவது உதவி செய்யனும்னுதான் உன்கூட பேச ஆரம்பிச்சேன். போக போக உன்கூட பேசறதே எனக்கு ரொம்ப சந்தோஷத்த குடுக்க ஆரம்பிச்சிடுச்சு. உங்கிட்ட சொல்லி உன்ன கஷ்டப்படுத்த வேண்டாம்னுதான் சொல்லல.”

“ஆர்த்தி… உனக்கு ஒன்னும் ஆகாது. நீ என்ன விட்டுட்டு எங்கயும் போக மாட்ட”

“ஆமாம். நான் எங்கயும் போக மாட்டேன் கார்த்திக்…
நீ பாக்கற ஒவ்வொரு புது மனிதர்களிளும் நான் இருப்பேன். நீ அவுங்ககிட்ட பேசும் போது அது என்கிட்ட பேசற மாதிரி… என்ன சரியா???”

ஒரு வாரம் சென்னையில் தங்கிவிட்டு வந்தேன்…

காலை 7 மணி…

வழக்கம் போல் லேசாக தூறல் போட்டு கொண்டிருந்தது. பஸ் வந்தவுடன் ஏறினேன்.

“ஹாய்… நான் இங்க உக்காரலாமா?”

“தாராளமா”

“என் பேர் கார்த்திக்…”

“நான் பாலாஜி…”

(ஆர்த்தியுடன் பேசி கொண்டிருந்தேன்…)

கடவுளும் பிரியாணியும் (1)






இன்றைய வளைதளங்களின் பெரிய போட்டியே கடவுள் தான்.கடவுள் இருக்கிறார் என்பது பெரும்பான்மையினரால் ஏற்றுக் கொள்ளப் பட்டாலும் பிரச்சனை கடவுளின் முகவரியில் தான் உள்ளது.இந்து மதம் தான் கடவுளின் உன்மையான முகவரி என்று ஒரு கூட்டமும்,கிறித்தவம் தான் என்று ஒரு கூட்டமும்,இன்னும் பல பல கூட்டங்களும் மோதிக் கொள்கின்றன.ஆன்மீகவாதிக்கும் நாத்திகவாதிக்கும் ஒரு சதவீத வித்தியாசம் தான்,நாத்திகவாதி கடவுளே இல்லை என்கிறான்,ஆன்மீகவாதியோ தன் கடவுளை தவிர மற்ற கடவுள் இல்லை என்கிறான்.இதை எப்படி தீர்ப்பது?ஒரு சின்ன வித்தியாசயம் தான்?அது நாம் விழிப்பாக இருக்கிறோமா? என்பது தான்.

புத்தர் தன் வாழ்க்கையில் எந்த ஒரு இடத்திலும் கடவுள் பற்றி கூறவில்லை?அவர் சொல்லவந்ததெல்லாம் விழிப்புணர்ச்சியுடன்(conscious) இருங்கள்.சாக்கரடீஸும் அதையே கேள்வி கேளுங்கள் என்றார்.அது என்னவென்றால் கண்ணை மூடிக்கொண்டு நம்மில் சிலர் கேள்வி கேட்பதுண்டு.அது அல்ல அர்த்தம்..இது ஒரு மறைமுகமான பதில் .நாம் விழிப்புணர்ச்சியுடன் இருந்தால் கேள்வி தானாக வரும்.அது தான் கடைசி கேள்வியாக இருக்கும்.விழிப்புணர்ச்சியுடன் இல்லாத கேள்வி வாதத்தின் தொடர்ச்சியாக இருக்கும்.கடவுள் இன்னும் வாதப் பொருளாக உள்ள காரணம் நாம் இன்னும் விழிப்பாக இல்லை.நாம் ஏன் விழிப்பாக இல்லை?ஏன் என்றால் நாம் மனம் என்னும் சக்தியின் பிடியில் உள்ளேம்.ஒவ்வொரு மனமும் ஒவ்வொரு உலகம்.கேள்வி என்பது மனம் என்னும் குளத்தில் எறியப்படும் கற்கள்.அதன் எதிரொலிதான் பதில்.குளம் அமைதியாக இருந்தால் அதில் இருந்து ஒரு அலை எழும் அது தான் இறுதி அலையும் கூட.
குளம் அமைதியாக இல்லா விட்டால் நாளொரு கேள்வி பொழுதொரு பதில் தான் கிடைக்கும்.
ஆளத்தெறிந்தவனுக்கு மனம் ஒரு கோவில்,இல்லையேல் அது ஒரு குரங்கு.முதலில் மூளையின் சக்தி என்னவென்றால் இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா அணுக்களின் எண்ணிக்கையை விட நம் மூளையில் உள்ள நரம்பணுகளின் எண்ணிக்கை அதிகம்.நம் மூளை பிரபஞ்சத்தை விட பெரியது.மொத்த மூளையின் ஒரு முகப்படைப்பே மனம்.மனதை அடக்குவது பிரபஞ்சத்தை கட்டுக்குள் கொண்டுவருவது.மனதை அடக்குவது என்பது கூட தவறான் வார்த்தை .அதை புரிந்து கொள்வது என்பது தான் சரியான விதம்.நாம் ஒரு அடி வைத்தால் நம் மனம் ஒரு முறை உலகை சுற்றி வந்து விடும்.முதல் விசயம் நாம் மனதை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.மனம் என்பதே நம்மை காக்கதான்.அது நம் நண்பன்.
மனம் எப்போதும் எடை போட்டுக் கொண்டே இருக்கும்.நாம் கெட்டவன் என்பதே நம்மக்கு தெரியாது.நம் மனம் ஒரு லஞ்சம் கொடுக்கப் பட்ட ஒரு நீதிபதி.நமக்கு சாதகமாக தான் தீர்ப்புவரும்.இவையெல்லாம் நாம் கவனிக்காத வரை தான்.நாம் கவனிக்க ஆரம்பித்திவிட்டால் அது தான் அற்புதம்.

வித்தியாசம் இது தான் காதல் செய்யக் கூடாது,காதலாகவே மாறிவிட வேண்டும்.அன்பு இல்லை அது அன்பாகவே மாறிவிடுவது.மனம் கழிந்த காதல் ஒரு கணம் எல்லேருக்கும் ஏற்ப்படுகிறது.பிரச்சனை வரும் போது காதல் மறந்து மனம் பொறுப்பேற்று குற்றம் காண ஆரம்பிக்கிறது.எந்த இடத்தில் எல்லாம் நாம் குற்றம் சொல்கிறோமோ அந்த இடத்தில் எல்லாம்
மனம் இருக்கிறது.இங்கு தான் விழிப்புணர்ச்சி தேவை.விழிப்புணர்ச்சியுடன் இருக்க ஆரம்பித்தால் உலகமே ஆச்சர்யமாக ஆரம்பிக்கும்.சிறு புல்லும் நம்மை ஞானி ஆக்கிவிடும்.
நாம் குளிக்கிறோம் ஆனால் அது ஒரு செயலாகவே நடக்கிறது.கை தண்ணீர் ஊற்றுகிறது மனமோ எங்கோ திரிகிறது.சாப்பிடுகிறோம் உடல் மட்டும் இங்கு ஆனால் மனமோ ஆகாயத்தில்.உடலும் மனமும் ஒருங்கே செயல்படும் நேரம் தான் விழிப்பு.அங்கு எந்த கேள்வியும் இல்லை பதிலும் இல்லை.நாமே ஒரு பிரபஞ்சம்.

விழிப்பு இல்லாத மனித மனதின் அருமையான ஒரு கண்டுபிடிப்பு இரட்டை.இரவு,பகல்,இன்பம்,துன்பம். விழித்துக் கொள்ள வேண்டும்.நான் இன்பம் பற்றி பேச ஆரம்பித்தால் உங்கள் மனம் துன்பம் பற்றி பேச ஆரம்பிக்கும்.இது ஒரு முடிவில்லா போராட்டம் தான்.இரட்டை இல்லாமல் வாழ்க்கை இல்லை.எது ஒன்றும் பெரியதும் இல்லை,சிறியதும் இல்லை.இவ்வளவு நேரம் இந்த பகுதியை படித்த நீங்கள் எவ்வளவு நேரம் உள் மன எதிர்ப்பு இல்லாமல் ஏற்றுக் கொண்டீர்கள் என்பது தான் விழிப்பு.இது வெறும் எழுத்திக்களின் கூட்டம் இதைப் பிடித்து தொங்காதீர்கள். விழிப்புடன் இருங்கள் அப்போது தான் வாழ்வின் ஓட்டம் புரியும்.

நிலையான ஒன்று என்று நான் சொன்னால்,இந்த பூமியே வேகமாக சுற்றிக் கொண்டு உள்ளது.அதில் நிலையான ஒன்று எங்கு உள்ளது.ஓடும் பொருளின் மேல் உள்ள எதுவும் நிலையாக இருக்கவே முடியாது.அதுவும் அசைந்து கொண்டே அல்லது ஆடிக்கொண்டே இருக்கும்.நிலையான என்ற வார்த்தையே பூமிக்கு ஒவ்வாதது என்று நீங்கள் சொன்னால் அது தான் என் கடைசி வார்த்தையாக் இருக்கும்.விழிப்பு இருக்கவேண்டும்.எதையும் பிடித்து தொங்காதீர்கள்.

(தொடரும்....)

தன்னம்பிக்கை

அந்த அறை முழுவதும் ஒரே அமைதி ஒரே சோகமயம் எடுத்திருப்பதோ வெறும் 183 ரன்கள் அறையில் நுழையும் போது அறையின் முழு சூழ்நிலையையும் புரிந்து கொண்டு எல்லோரையும் அழைத்து சிரித்த முகத்துடன் பேசத்துவங்குகிறார் கபில்தேவ்
"நம்மைப் போன்ற சிறந்த வீரர்களை அவர்களால் 183 ரன்களுக்கு அவுட் செய்ய முடியுமென்றால் நம்மாளும் முடியும் நம்பிக்கையோடு விளையாடுங்கள்" என்றார்.

அன்றைய ஆட்டம் இந்தியாவுக்கு உலககோப்பை பெற்று தந்த ஆட்டம்.

உலகமுழுவதும் பொருளாதார பெருமந்தம் எங்கு பார்த்தாலும் வேலை நீக்கம்,பங்கு சந்தைவீழ்ச்சி.இது தீர 5 வருடங்கள் ஆகும் என் உலக வல்லுனர்கள் எல்லாம் கை விரித்தனர்.ஆனால் ஒரு மூலையில் மட்டும் "வெற்றி உனது(jaiho) வெற்றி உனது(jaiho)"
என ஒரே ஆனந்த தாண்டவம் ஒரு சின்ன நம்பிக்கை சுடர் மட்டும் உலகத்தை துளைத்தெடுத்தது.ஆறே மாதத்தில் உலகம் மீண்டெழுந்தது.அதற்காகவே அது இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் பெற்றது.

தோல்வியின் மத்தில் நின்று கொண்டு வெற்றி நமதே என் சொல்வது மட்டும் தன்னம்பிக்கையில்லை.தோல்வியே அடைந்தாலும் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டே இருப்பது தான் தன்னம்பிக்கை.

சர்ச்சிலிடம் பத்திரிக்கை நண்பர்கள் கேட்டார்களாம் "ஏன் உங்களால் காந்தியை ஒன்றும்
செய்ய முடியவில்லை என்று".அவர் சொன்னார் காந்தி கத்தி எடுத்திருந்தால் நான் துப்பாக்கி கொண்டு அடக்கி இருப்பேன். துப்பாக்கி எடுத்திருந்தால் பீரங்கியால் அடக்கி இருப்பேன்.ஆனால் அவர் சத்தியத்தை ஆயுதமாக தாங்கி வருகிறார். சத்தியத்தை தோற்கடிக்க இது வரை ஒரு ஆயுதமும் கண்டுபிடிக்கப் படவில்லை அதனால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.

சத்தியம் மட்டுமே இந்தியாவின் ஆயுதமாக, தன்னம்பிக்கை அதை வழி நடத்த இந்தியாவின் சுதந்திரம் உதயமானது.

உலகம் முழுவதையும் வென்ற அலெக்சாண்டரையும்,டெஸ்டில் தொடர்ந்து வெற்றி பெற்று கொண்டுவந்த ஆஸ்திரேலியாவையும் தடுத்து நிறுத்தியது இந்தியா தான்.காரணம் போராட்டம் குணம் விட்டுகொடுக்க மாட்டேன் என்கிற போராட்டம் குணம்.

யாருக்காகவும் எதற்காகவும் கொண்ட கொள்கையிளும் ,எடுத்த முடிவுகளையும் விட்டுகொடுக்காதிர்கள்.

உலகத்தின் நம்பர் ஒன் பணக்கார வாரியம் இந்தியா கிரிக்கட் வாரியம்.ஆனால் இந்தியா வெற்றி பெறுவது எப்போதாவது தான்.பிறகு எப்படி நம்பர் ஒன் பணக்கார வாரியம்.தெரிந்து கொள்ளுங்கள் வெற்றி பெறுவதை விட எப்படி தோற்றீர்கள் என்பது தான் முக்கியம்.இந்தியா விளையாண்டால் கடைசி பந்து வரை போராட்டம் தான்.

வெற்றியாளனாக இருப்பதை விட தோற்றாலும் சிறந்த எதிரணியாக இருப்பது தான் தன்னம்பிக்கை.

அவனை அன்றுதான் பள்ளியில் தாய் சேர்த்தால் ,சேர்ந்த சில நாட்களில் அவன் பள்ளி குறிப்பேட்டில் ஆசிரியர் இப்படி எழுதி அனுப்புகிறார்."இவனைப் போன்ற முட்டாளை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று."அதைப் பார்த்த தாய் அழுது கொண்டே சொல்கிறாள்"என் மகன் முட்டாள் அல்ல,அவனை நான் புத்திசாலி ஆக்குகிறேன் என்று"இன்று அவனைப் பற்றி எல்லா குழந்தைகளும் படிக்கின்றனர்.அவன் தான் இருட்டில் உழன்ற உலகத்திற்கு வெளிச்சம் காட்டிய தாமஸ் ஆல்வா எடிசன்.

உலகம் தனக்கென்று ஒரு வரையறை வைத்துள்ளது அதன் படி நீ இருந்தால் நீ புத்திசாலி, இல்லை என்றால் முட்டாள்.தன்னம்பிக்கை உள்ளவர்கள் எல்லாம் முட்டாள்கள் ஏன் என்றால் அவர்கள் வரையறை மட்டும் அல்ல உலகையே மாற்ற பிறந்தவர்கள்.

அந்த கூட்டுகுடும்பத்தில் பிறந்த அவனுக்கு பிறந்தநாள் அவன் பாட்டி குடும்ப ஏட்டில் இப்படி எழுதினால் "எனக்கு ரவியின் எதிர்காலம் நினைத்தாலே பயமாக இருக்கிறது"என்று.ஆனால் அவனோ இன்று இரு நாடுகளுக்கு தேசிய கீதம் பாடி,நோபல்பரிசும் பெற்றான்.அவன் தான் ரவீந்திரநாத் தாகூர்.

நம்மை பற்றி உலகம் என்ன நினைக்கிறது என்பது முக்கியம் அல்ல, நம்மை பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பது தான் "தன்னம்பிக்கை".

உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இது தான் தன்னம்பிக்கையின் கானம்.

எதார்த்தம்

எறும்புத் தோலை உரித்துப் பார்த்தேன் யானை வந்ததடா
நான் இதயத்தோலை உரித்துப் பார்த்தேன் ஞானம் வந்ததடா என்றான் கண்ணாதாசன்.

அருமையான் வரிகள் ஆழ்ந்த ஞானமும் கூட.ஆனால் இவை எதார்த்தமான வரிகளா?
எதார்த்தம் என்றால் என்ன?இயல்பு நிலையை அல்லது இயற்கையில் நிகழ வாய்ப்பு உள்ள ஒரு நிலையை நாம் எதார்த்தம் என்று மொழி வழியில் பொருள் கொள்கிறோம்.இங்கே "எறும்பு" ஒரு இயல்பு நிலை அல்லது இயற்கை நிலை,"தோல்" இயல்பு நிலை,"உரித்தல்" இயற்கையில் நிகழ வாய்ப்பு உள்ள ஒரு நிலை ஆக ஒவ்வொரு வார்த்தையையும் பிரித்துப் பார்த்தால் "இயல்பு நிலையை அல்லது இயற்கையில் நிகழ வாய்ப்பு உள்ள ஒரு நிலையை" குறிக்கிறது.
ஆனால் சேர்த்துப் பார்த்தால் எறும்பை பார்ப்பதே கஷ்டம் அதன் தோலை உரித்தல் என்றால்?இதில் யானை வேறு?அடுத்து இதயத்தோலை உரிப்பது. முடியல இப்பவே கண்ண கட்டுதே!! முடிவாக ஞானம் என்பது எதார்த்தில் இல்லை என்பது தான் கண்ணாதாசன் சொல்ல வரும் கருத்தா?

தாகூர் மரணப் படுக்கையில் இருக்கும் போது யாரோ ஒருவர் கேட்டாராம் "இந்த உலகிலே சிறந்த கவி நீங்கள் தான் ஏன் என்றால் நீங்கள் தான் 6000 கவிதைகள் எழுதி உள்ளீர்கள்.யாரும் இவ்வளவு கவிதைகள் எழுதியது இல்லை.நீங்கள் சொல்ல வந்தெல்லாம் சொல்லிவிட்டீர்கள் தானே?"அவர் அழுது விட்டார்.யாருக்கு தெரியும் எல்லா கவிகளும் தான் சொல்ல வருவதை ஒரு பாடலில் சொல்ல முடிவதில்லை.அவர் சொல்ல வந்ததை
சொல்லவில்லை என்பது தான் அர்த்தம்.

நுண்ணுலக எதார்த்தில்(quantum reality) ஒரு துளையில் இருந்து வரும் ஒளியில் ஒரு எலெக்ட்ரான் எல்லா இடத்திலும் உள்ளது.நம்மால் சரியான இடத்தை சொல்ல முடியது.
இதை முதல் முறை கேட்ட ஐன்ஸ்டைன் இதெல்லாம் மடத்தனம் என்றார்.ஒரு கட்டத்தில்
நண்பரிடம் நான் என் கண்கள் வழியே நிலவை பார்க்கிறேன் இது எதார்த்தமா அல்லது கனவா? என்றார்.

யானி இந்த நூற்றாண்டின் மாபெரும் இசை ஞானி அவருடய "tribute" இசைக்கோவை
சர சர வென ஓடும் மின்னல் குதிரை.ஆனால் பிரித்துப் பார்த்தால் ஒரு சாதாரண இசைக்கோவை.இதை அவர் எழுதியதின் பின் காரணம் அவர் நாட்டில் பூகம்பம் அதன் முழு அனுபவத்தைதான் அவர் இசைக்கோவையாக மாற்ற நினைத்தார்.

இங்கு எல்லோரும் தாங்கள் கண்ட ஓர் அனுபவத்தை தங்கள் திறமையின் மூலம் வெளிப்படுத்த முயற்சி செய்கிறார்கள்.அது தான் இங்கு பிரச்சனை.சாதாரணமான நம் வாழ்வில் காதல்,காதல் தோல்வி,அன்பு,கருனை என நுழையும் போது மிக பெரும் அனுபத்தை சந்திக்க நேரிடுகிறது.சாதாரணமாக நாம் எல்ல அனுபவங்களையும் எழுத்தின்
மூலமாகவும்,பேச்சின் மூலமாகவும் பெறுகிறோம்.ஆனால் அனுபவம் என்பது அனுபவிக்க பட
வேண்டியது.காதல் தோல்வி என்பது அனுபவம் அப்போது நாம் நமக்கு தெரிந்த வழியில்
எழுதவோ அல்லது பேசவோ ஆரம்பித்து விடுகிறோம்.ஆனால் நம்மால் முடிவதில்லை.

தாகூர் மொழிப் புலமை மிக்கவர்,யானி இசை புலமை மிக்கவர்,ஐன்ஸ்டைன் அறிவியல் புலமைமிக்கவர்.எல்லோரும் அனுபத்தை தங்களுக்கு தெரிந்த வழியில் வெளிப்படுத்த முயன்றிரிக்கிறார்கள்.அது எதார்த்ததில் இல்லை.

சிகரம் வைத்தார் போல் பாரதியின் பாடல் வரிகள்
"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்- அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

வெந்து தணிந்தது காடு- தழல்

வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!'"

முழுமையான அனுபவ பாடல் வரிகள்.அனுபவம் மட்டுமே எதார்த்தம்.அது மட்டுமே எதார்த்தம்.நாம் நம் மொழியின் வாயிலாக இயற்கையை ரசிக்கலாம் ஆனால் கட்டுப்படுத்த முடியாது.

"தனிமையில் காணம்
சபையினில் மொளனம்
அன்பு கொண்ட நெஞ்சில் அனுபவம் இல்லை
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்.
"

ஏஸ் தம்மோ ஸ்னந்தனோ

மூக்கு கண்ணாடி காணவில்லை

மூக்கு கண்ணாடி காணவில்லையென்றால் கண்டு பிடிக்கலாம்
ஆனால் மூக்கே காணவில்லையென்றால்,
விதையில் மரமுள்ளதுதான்
ஆனால் அதை பிரித்தால் ,
எழுத்துகள் அர்த்தமுள்ளதுதான்
அதை பிரித்தால்,
கண்ணாடியில் நம்மைக் காணலாம்
கண்ணாடியில்லாமல் பார்க்க முடிந்தால்

இதை தியானம் செய் என்கிறது சென்.

இதுவும் வாழ்க்கைதான்

எப்போதும் நண்பர்கள் புடை சூழ ,வாழ்க்கையில் சந்தோஷம் மட்டும் காணும் அவன் வீட்டிற்கு ஒரே பையன்.ஆனால் பாசத்திற்காக ஏங்கிய நாட்கள் ஏராளம்.அம்மா,அப்பாவின் அன்பு அவனுக்கு எட்டிக்காயாய் கசந்தது. கல்லூரி என்னும் வசந்த காலமும் வந்தது. நண்பர்கள் என்னும் றெக்கையும் முளைத்தது.பறக்க ஆரம்பித்தான் வானத்தில்.ஆனால் இன்னும் அந்த ஏக்கம் தீரவில்லை.

அப்போது தான் அவளும் வந்தாள், காதலியாக அல்ல, தங்கையாக.ஆமாம் இவன் வாழ்க்கை சற்று வினோதமானது.இவன் பரம்பரை துளி அளவுக்கு கூட தங்கை என்ற வார்த்தையை கண்டது இல்லை.உண்மைதான் இவன் ஏங்கியது தங்கை பாசத்திற்கு.அவளுடைய அம்மா சிறு வயதில் இறந்து விட்டாள் என்று நண்பர்கள் சொல்ல வெடித்தது கருணை என்ற எரிமலை.ஓடினான் அவள் அருகில், செல்லமாக ஒரு கொட்டு அவள் தலையில் வைத்து சொன்னான் ”இன்று முதல் நீ என் தங்கை” என்று.அன்று முதல் அவள் யாரிடம் பேசினாலும் பிடிக்காது,பழகினாலும் பிடிக்காது.இயற்கைக்கு இவன் மட்டும் விதி விலக்கா?ஆமாம் நாம் எப்போதும் நமக்கு அன்பானவர்களை அதை செய்யாதே, இதை செய்யாதே என்று ஆதிக்கம் செலுத்தி அவர்களை மாற்றுவது தானே வேலை.அன்பு என்பது அப்படியே எற்றுக்கொள்வது என்பது அவனுக்கு தெரியவில்லை.

இதற்கிடையில் அவளுக்கு காதலனும் வந்தான்.ஆரம்பித்தது பாசப் போராட்டம்.இரு பக்கமும் அவளுக்கு ஆரம்பித்தது இடி.அவள் காதல் வளர ஆரம்பித்தது வளர்பிறையாக,அண்ணண் பாசம் செல்ல ஆரம்பித்தது தேய்பிறையாக.அவள் பொய் சொல்லவும் ஆரம்பித்தால்.அன்று தங்கை பாசத்திற்காக ஏங்கியவன், இன்றோ அதே பாசத்தால் உருகி உருகுலைய தொடங்கினான்.அன்று அண்ணண் எதிரில் பேச கூட பயந்தவள், இன்று அவனுக்கு எதிரில் காதலனுடன் கைகோர்த்து செல்கிறாள்.காலங்கள் செல்ல செல்ல ஏமாற்றங்கள் அதிகரித்தன.

ஒரு கட்டத்தில் அவளுக்காக உயிர் நண்பர்கள், ஆசிரியர்கள் என எல்லோரிடமும் சண்டை போடுகிறான். நண்பர்களோ நீ என் நண்பன் இல்லை என்று எட்டி உதைக்கிறார்கள்.தங்கையின் காதலன் மிக நல்லவன்,இவனின் உயிர் நண்பன் என்பதால் மௌனமாக பச்சை கொடி காட்டினான்.எந்த தங்கைக்காக நண்பர்கள், ஆசிரியர்கள் என எல்லோரையுமே பகைத்தானோ! அவள் இது வரை தன் காதல் விஷயத்தை அண்ணணிடம் சொல்லவே இல்லை.பொய் என்ற போர்வையால் அனைத்தையும் மூடி மறைத்தாள்.ஒரு கட்டத்தில் தங்கையிடம் கேட்பதென முடிவெடுத்தான்.அவளிடமும் கேட்டான்.அவளும் உண்மையை சொல்ல அவன் இதயமே வெடித்தது போல் ஆனான், ஏன் தெரியுமா?ஆமாம் அந்த கல்லூரி முழுவதும் நண்பர்கள்,ஆசிரியர்கள் என அனைவரும் சொன்னார்கள் ” உன் தங்கை காதல் செய்கிறாள்,உன்னை ஏமாற்றுகிறாள்” என்று.அவர்களுக்கு அவன் என்ன பதில் சொன்னான் தெரியுமா? ”யார் என்ன சொன்னாலும் சரி என் தங்கை மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு” என்று சொல்லி சண்டை போட்டான்.ஆனால் அவன் தங்கையோ சிரித்துக் கொண்டே காதல் விஷயத்தை சொன்னாள்.அழுதான்,புலம்பினான்,தூக்கம் இல்லை,உணவு இல்லை,அம்மா அப்பா மறந்து போனார்கள்,நண்பர்கள் மறந்து போனார்கள்.ஆமாம் அதே நிலை அன்று புத்தனுக்கு வாழ்வில் ஏற்பட்ட கசப்பான நிலை.

அன்று முதல் அவன் யாரிடமும் பேசுவதும் இல்லை.இந்த நேரத்தில் கல்லூரியும் முடிவுக்கு வந்தது.எல்லோருமே அவனை விட்டு நகரத் தொடங்கினார்கள்.அவன் அப்போது முழு ஞானியாக இருந்தான்.கல்லூரியின் கடைசித் தேர்வும் முடிந்தது.அன்று மாலை அவன் தங்கையின் காதலனைப் பார்த்தான்.அவனுடைய சந்தோஷம் மட்டும் அவன் கண்ணில் பட்டது.கண்ணீருடன் வீட்டிற்கு சென்றான்.வீட்டின் மாடியில் இருட்டில் கண்ணீருடன் கல்லூரி வாழ்க்கையை அசை போட்டான்.அப்போது தான் நண்பன் ஒருவன் சொன்னது ஞாபகம் வந்தது ” அவள் எங்கு இருந்தாலும் அவளுக்கு நீதான் அண்ணண்” என்று.அவனுடய கண்ணில் ஒரே பிரகாஷம் வந்தது ஞானம்.எடுத்தான் பேனாவையும் பேப்பரையும் வேகமாக எழுதினான் இப்படி

””நான் உன்னை மறக்கவில்லை,மறைத்துவிடுகிறேன்

ஆமாம் அவன் அவளை விட்டுக் கொடுத்தான் நண்பனுக்காக.இப்போதுதான் அவனுக்கு வாழ்க்கை புரிந்தது.விட்டுக்கொடுப்பதும் , எதிரே உள்ளவரை மாற்ற நினைக்காமல் அப்படியோ ஏற்று கொள்வதும் தான் வாழ்க்கை, உண்மையான அன்பு.இன்றோடு மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டன அவளிடம் பேசி.அவளை நினைத்துக் கொண்டே ,வாழ்த்திக் கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கிறான்.அந்த அன்பு அண்ணண்.